Chapter 2

ஆணழகன், அறிவாளி, தியானி

1 sections

ஆணழகன், அறிவாளி, தியானி

வெள்ளைச் சுண்ணாம்பு பூசியதால் கல்லறை வெள்ளை மாளிகையாகிடாது.

காட்டு மிருகங்கள் வாழும் மனம் பூந்தோட்டமாகிட மனநேயம் வாழும் மாளிகையாகிட மனம் தூர்வாரப்பட வேண்டும்.

வெள்ளையடிக்கப்பட்ட சுவராய் எல்லாருமே இருப்பதால்

யார் மனம் காடு, யார் மனம் வீடு, யாருக்கு கவலையில்லை.

இதோ ! கவலைப்பட வேண்டிய காலம் வந்து விட்டது.

சுயம்வரத்தில் ஒரு ஆணழகன் ஒரு அறிவாளி ஒரு தியானி

யாரது ? . . . ஆவல் அதிகரிக்க ... வந்தாள் இளவரசி மாலையிட்டாள் தியானிக்கு

தோழி கேட்டாள் 'ஏன் மறுத்தாய் ஆணழகனை'

இளவரசி சொன்னாள் 'அவன் கட்டுடலுக்குள் எத்தனை மிருகங்கள் தூங்குகிறதோ தெரியாது. அதற்கு என் தந்தை சாட்சி'

தோழி அறிவாளி ?

இளவரசி

வாழ்வுக்கு உதவா,

வாதத்துக்கு மட்டுமே உதவும்

மூளை பெருத்தவன் உறுத்தல்களை

யார் தாங்குவது. இதற்கு

நம் மந்திரிகள் சாட்சி!

தோழி

'தியானி ?'

இளவரசி

அவருக்குள்

மிருகங்கள் இல்லை என்பதற்கு

அவரின் சாந்தமான கண்கள் சாட்சி.

அவரிடம்

வாதமிட வாதம் குறைவு.

வருத்தத் தூண்டும் பந்தம் குறைவு. இதற்கு

அவரின் உடலின் நளிணம்

முகத்தின் பொலிவு சாட்சி.

சுருங்கச் சொல்வேன் கேள்

தியானி

வம்பு தும்பில்லாதவர்

வம்பு தும்பிழுக்கத் தெரியாதவர்

ஆனால்,

வாழத் தெரிந்தவர்

என கவி பொழிந்து

கலகல... சிரிப்பை

ஆனந்தத் தெளிப்பாய்!

அள்ளித் தெளித்தாள்

தியான மகத்துவம் புரிந்த

இளவரசி

உடல் பலம் மட்டும்

மிகுந்தால் முரடன்.

மன பலம் மட்டும்

மிகுந்தால் நல்லவன்.

ஆத்ம பலத்தைத் தரும்

தியானம்

தேவையான

மனபலத்தையும்

உடல்பலத்தையும்

உடனே தரும்.