2. ஸ்ரீ ராமகிருஷ்ணர், சாரதா தேவியின் தரிசனம்
2. ஸ்ரீ ராமகிருஷ்ணர், சாரதா தேவியின் தரிசனம்
இடுப்புக்கு ஒரு காவித் துணி தோளுக்கு ஒரு காவித் துணி கையில் ஒரு காவித் துண்டு கழுத்தில் ஒரு ருத்ராட்ச மாலை கமண்டலம் என்று ஒரு பாத்திரம் இவையே பரிவராஜக வாழ்க்கையைத் துவங்கிய போது அவரிடம் இருந்த உடைமைகள். கையில் ஒரு பைசா கூட இல்லாமல் அடுத்த வேளைக்கு உணவு சேமிக்கக் கூடாது என்ற மனக் கட்டளையோடு ஆன்மீகத் தேடுதலை மேலும் தீவிரப்படுத்தினார்.
பல புத்தகங்கள், வேதங்கள், சாஸ்திரங்கள் என்று படித்துக் கொண்டிருக்கும்போது, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் 'அமுத மொழிகள்' என்ற புத்தகம் அவரை மிகவும் கவர்ந்தது.
ஒரு விஷயம் தன்னைக் கவர்ந்துவிட்டால் அதில் அவர் காட்டும் ஈடுபாட்டுக்கும், ஆர்வத்திற்கும் அவரே இணை. என்னை இவ்வளவு ஈர்க்கிறதே இந்த புத்தகம்! என்று ஒரே மூச்சில் உட்கார்ந்த இடத்தை விட்டு எழாமல் பத்து மணி நேரம் தொடர்ச்சியாகப் படித்து முடித்தார்.
அதன் பின் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் போதனைகளில் லயித்து மூன்று நாட்கள் கழித்த பின் மீண்டும் ஒரு எதிர்பாராத அற்புதம் நிகழ்ந்தது. அதை அவர் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை.
மூன்று நாட்கள் கழிந்த பின் ஸ்ரீ ராமகிருஷ்ணரும், சாரதா தேவியும் தரிசனம் கொடுத்தார்கள். இந்த தரிசன அனுபவம் ஆன்மீகத் தேடுதல் என்னும் அவரது யாக்கையில் நெய் ஊற்றியது போல் ஆயிற்று. அதன் பின் ராமகிருஷ்ணர் அவரது இதயக் கோவிலில் நீங்காத இடம் பிடித்துவிட்டார்.