3. மகத்தான ஆன்மீக அனுபவம்
3. மகத்தான ஆன்மீக அனுபவம்
வைகாசி மாதத்தில் பவளக்குன்று என்ற இடத்தில் ஒரு சிறிய பாறையின் மீது அமர்ந்தபடி தியான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்த 12 வயதில் தியானம் என்றால் என்ன என்று கூடத் தெளிவாகத் தெரியாத பருவத்தில் தியானத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அன்றைய தினம் முழுப் பௌர்ணமி, விசாக நக்ஷத்திரம். தியான முயற்சியில் அவருக்கு ஒரு மகத்தான ஆன்மீக அனுபவம் ஏற்பட்டது. அது பற்றி சுவாமியே சொல்கிறார், "சூரியன் மறைந்து முழுச்சந்திரன் எழும் அழகான சாயங்கால வேளையில் பவளக்குன்றில் தளர்வாக அமர்ந்தபடி எனக்குள் மூழ்கும் தியானத்தில் ஈடுபட்டேன். சிறிது நேரத்திற்குப் பின் சற்றும் எதிர்பார்க்க முடியாத அனுபவம் ஏற்பட்டது. திடீரென்று, கொஞ்சம், கொஞ்சமாக நான் உடல் என்ற உணர்வு மறைய ஆரம்பித்தது. சட்டென்று! ஏதோ திறந்து கொண்டதைப் போன்று, ஏதோ உள்ளே உடைந்ததைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. நான் தனி மனிதன் என்ற உணர்வும் முழுவதுமாக மறைந்து விட்டது. பிரானே எல்லாமாக உணர்ந்தேன்.
என்னைச் சுற்றி இருந்த எட்டுத் திசைகளையும் ஒரே நேரத்தில் மிகத் தெளிவாகப் பார்க்கவும் உணரவும் முடிந்தது. எனக்கு முன்னால் இருந்த மலையும், பின்னால் இருந்த கோவிலும், இடது பக்கத்திலிருந்த பாறைகளும், வலது பக்கத்திலிருந்த மரங்களும், மேலிருந்த வானமும், நான் உட்கார்ந்திருந்த பாறையும் மிகத் தெளிவாகத் தெரிந்தன. என்னைச் சுற்றி இருந்த எல்லாம் நானாகவே உணர்ந்தேன்."
(இதுதான் Out of body experience என்று பின்னாளில் சுவாமிகள் உணர்ந்து கொண்டார்.)
அந்த ஆனந்தமான ஆன்மீக அனுபவம் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நீடித்தது. மீண்டும் உடலுக்குத் திரும்பிய பின் அவரை ஆனந்த ஜூரம் பற்றிக் கொண்டது.
தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உடனே யாரிடமாவது பகிர்ந்து கொள்ள விரும்பினார். மாதாஜி குப்பம்மாவை சந்தித்தார். தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை விளக்கினார். மாதாஜி, "இது ஒரு மிகப்பெரிய ஆன்மீக அனுபவம், இப்போது உனக்கு இருக்கும் இந்த ஜுரம் ஆனந்த ஜுரம்" என்று விளக்கம் கொடுத்தார். அவர் அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆனந்த நிலையை யாரும் கெடுத்துவிடக்கூடாது என்பதற்காக ராஜசேகரனைத் தன் முழுப் பொறுப்பில் ஏற்றுக் கொண்டார். கிட்டத் தட்ட ஆனந்த ஜுரம் அவருக்கு மூன்று நாட்கள் நீடித்தது. அப்போது அவர் உடல் நிலைக்கேற்ற உணவை மாதாஜி குப்பம்மாள் தயாரித்துக் கொடுத்தார்.
சில நாட்கள் கழித்து அந்த அனுபவத்தை மீண்டும் பெற வேண்டும் என்று தீவிரமானார். அது அவரது ஆன்மீகத் தேடலின் வேகத்தைப் பல மடங்கு அதிகரித்தது.
4. சுடுகாட்டில் தியானம்
எப்படியும் இவர் சந்நியாசியாகப் போகிறார் என்று தெளிவாகத் தெரிந்த பின், அவரது பெற்றோர் "நாம் இவருக்கு வெறும் பாதுகாவலர்களே" என்று உணர்ந்து கொண்டனர். அதன் காரணமாகப் பல நாட்கள் நடுநிசி தாண்டி அவர் வீடு திரும்பினால் கூட எதுவும் கேட்க மாட்டார்கள்.
சுடுகாட்டில் அமர்ந்து வெகு நேரம் மயான அமைதியில் தியானம் செய்வதும் நள்ளிரவிற்கு மேல் வீடு திரும்புவதும் ராஜசேகரனின் வழக்கமாயிற்று. ஒரு முறை கூட அவரது பெற்றோர் அவரது நடவடிக்கைகள் குறித்து வருத்தமோ, கோபமோ, சலிப்போ கொண்டதில்லை.
தன்னுடைய எந்த விதமான ஆன்மீகச் செயலுக்கும் சிறிது கூடத் தடங்கல் செய்யாமல் இருக்கும் தன் பெற்றோரை நினைக்கும் போதெல்லாம் நன்றி உணர்வே மேலிடும். ஏன்? இன்றும் கூட THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தன் பெற்றோரை மிகுந்த நன்றி உணர்வுடன் நினைவு கூர்கிறார்.