2. அண்ணாமலை சுவாமிகளோடு
2. அண்ணாமலை சுவாமிகளோடு
ஸ்ரீ ரமண மகரிஷியின் சீடர்களில் ஒருவர் தான் இந்த அண்ணாமலையார் சுவாமிகள். திருவண்ணாமலையில் பிலாக்கொத்து என்ற இடத்தில் சுவாமிகள் வாழ்ந்து வந்தார். ஆன்மீகம் சம்பந்தமான விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காக ராஜசேகரன் அடிக்கடி சுவாமிகளைச் சென்று பார்த்துவிட்டு ரமண மகரிஷி மடத்தில் தியானம் செய்வது வழக்கம்.
அப்படி ஒருமுறை சென்றிருந்தபோது, சில பக்தர்களுக்கு வேதாந்த உரையாற்றிக் கொண்டிருந்தார் சுவாமிகள். "நான் சரீரமல்ல, ஆன்மா" என்றார். மேலும், "வலி என்பது சரீரத்திற்குத்தான், ஆன்மாவிற்கு அல்ல" என்று உபதேசம் செய்து கொண்டிருந்தார். அதைப் பற்றித் தீவிரமாக யோசித்தவண்ணம் வீடு வந்து சேர்ந்தார்.
'நான் ஆன்மா', 'வலி சரீரத்திற்குத்தான்' என்றால் "எனக்கு வலிக்கக் கூடாது அல்லவா?" என்று தனக்குத்தானே கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தார். எதையும் சோதித்து உண்மை என்று தெளிவாகத் தெரிந்த பின்னரே நம்பும் இயல்பு கொண்டவர் ராஜசேகரன்.
எனவே இந்த உபதேசக் கருத்தையும் சோதித்துப் பார்த்து விடுவது என்ற முடிவுக்கு வந்தார். சுற்றிமுற்றிப் பார்த்தார். கண்ணில் கத்தி தென்பட்டது. அது கூர்மையாகட்டும் என்று துளியும் பயமே இல்லாமல் கத்தியை எடுத்து, சுண்டு விரல் நீளத்துக்கு வலது தொடையில் ஒரு கிழி கிழித்து விட்டார்.
இரத்தம் கொட்டுகின்றது! வலி எடுக்கிறது! எரிச்சல் தெரிகிறது! இருந்தும் சத்தமோ கூச்சலோ போடவில்லை. மாறாக அதே தீவிரத்தோடு மனதில் திரும்பத் திரும்ப, "நான் சரீரமல்ல, ஆன்மா என்றால் ஏன் எனக்கு வலிக்க வேண்டும்"? என்று கேட்டுக் கொண்டே இருந்தார்.
தொடையில் இருந்து இரத்தம் வழிந்து கொண்டிருக்கிறது. ராஜசேகரன் "எங்கு தப்பு நடந்தது? எப்படி எனக்கு வலிக்கலாம்?" என்று மீண்டும் அதே சிந்தனையில் மூழ்கிப் போயிருந்தார்.
குடும்பத்தார் பார்த்துப் பதறிப்போய் உடனே மருத்துவரிடம் அழைத்துச் சென்று தேவையான சிகிட்சை அளித்தார்கள். சிகிட்சை முடிந்த கையோடு நேரே அண்ணாமலை சுவாமிகளைப் பார்க்கக் கிளம்பி விட்டார். சுவாமிகளிடம், "நான் ஆன்மா என்றால் எனக்கு ஏன் வலித்தது? கிழிந்தது சரீரம்தானே," என்று ராஜசேகரன் கேட்டார். அண்ணாமலை சுவாமிகள் சரீரம், ஆன்மா பற்றி மீண்டும் தெளிவாக விளக்கிவிட்டு, "இன்னும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அது உன் சொந்த அனுபவத்தால்தான் முடியும்" என்று கூறினார். பின்னர் எண்ணங்கள் எங்கிருந்து உருவாகின்றன என்பதைக் கண்டுபிடிக்கத் தியானம் ஒன்றைச் சொல்லிக் கொடுத்தார். "இந்தத் தியானத்தை முழுமையாகச் செய் உன்னுடைய கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்" என்றார். ராஜசேகரன் தியானத்தை முழு மூச்சாகத் தொடர்ந்து செய்தார். பதில் கிடைத்தது. சந்தேகம் தெளிந்தது.