163. அந்த மூன்று நாட்களில் தியானம் செய்வது
# அந்த மூன்று நாட்களில் தியானம் செய்வது
Meditating in those three days
- பெண்கள் அந்த மூன்று நாட்களில் சடங்காச்சாரியங்களில் ஈடுபடக்கூடாதாம்! தியானமெல்லாம் புனிதமான விஷயமாம்! நான் மண்டாக இருப்பதால் எனக்கு எதை, எப்பொழுது செய்ய வேண்டுமென்று தெரியவில்லையாம்! நான் தியானம் செய்வது தவறா? விளக்கம் வேண்டும் .
- தேவி, தென்காசி.

தியானம் செய்வதற்கு நல்ல நாள், கெட்ட நாள் பார்க்க வேண்டிய அவசியமில்லை. நல்ல நேரம், கெட்ட நேரம், தீட்டு என்று எதுவுமே பார்க்க வேண்டிய அவசியமில்லை.
24 மணி நேரத்தில், எந்த நேரத்தில் தியானம் செய்தாலும் நல்லதே.. எல்லா நேரத்திலும் தியானம் சக்தி ஒட்டத்தை உங்களுக்குள் அதிகரிக்கவே செய்யும். மாதத்தின் 30 நாட்களில் எந்த நாளில் தியானம் செய்தாலும் நல்லதே.. எல்லா நாட்களிலும் தியானம், சக்தி ஒட்டத்தை நிச்சயம் அதிகரிக்கும்.
பெண்களுக்கு இயற்கையாக உடல் சுத்திகளிப்பு நடைபெறும் அந்த 3 நாட்களிலும் தியானம் செய்யலாம். சரியாகச் சொல்ல வேண்டுமானால் அந்த நாட்களில்தான் தியானம் மிக மிக அவசியம்.
காரணம் மனமும், உடலும் சக்தியிழந்து சக்திக் குறைவால் கஷ்டப்படும் அந்த நேரத்தில் தியானம் தரும் கக்தி ஓட்டம் நிச்சயம் வரப்பிரசாதமே. தியானம் எந்த வகையிலும் புனிதமற்ற செயலாக முடியாது.
பழங்காலத்தில் பெண்கள் சில நாட்களாவது, ஓய்வாக இருக்கட்டும் என்று வீட்டார் கொடுமையிலிருந்து பெண்களை காப்பாற்றுவதற்காகப் பெரியவர்கள் வகுத்த திட்டம்தான் தீட்டு, வீட்டை விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும் என்பது போன்ற பழக்கமெல்லாம். ஒரு நல்ல விஷயத்திற்காக அந்தக் காலத்தில் உருவாக்கிய சில பழக்கங்களுக்கு இந்தக் காலத்தில் முக்கியத்துவம் கொடுப்பது புத்திசாலித்தனம் அல்ல.
நீங்கள் தியானம் செய்வது தவறல்ல. அந்த நேரத்தில்தான் தியானம் திச்சயம் தேவை. நன்றாகச் செய்யலாம், செய்ய வேண்டும்.