கடவுள் துகள், கடவுளாவதற்கு ஆதிசைவமே கதி
கடவுள் துகள், கடவுளாவதற்கு ஆதிசைவமே கதி
எது உங்கள் இதயத்திற்குள் ஒலித்துகொண்டிருக்கிறதோ, அதுதான் உங்கள் த்வனியிலும் இறுதி எதிரொலியாக இருக்கும். நீங்கள் என்னதான் வார்த்தைகளை மாற்றி விளையாடினாலும், உங்கள் வார்த்தைகளுக்கு இடையில் வருகின்ற செய்தி ... உங்கள் இதயத்தில் இருக்கின்ற உணர்வு ... அது தானாகவே, நீங்கள் என்ன எழுதினாலும், நீங்கள் என்னுரைத்தாலும் அதன் முன்னுரையும் பின்னுரையுமாய் மாறிவிடும். உங்கள் முன்னுரைப்பும் பின்னுரைப்பும் உங்கள் இதயத்திற்குள் ஒலித்துகொண்டிருக்கும் அந்தச் செய்தியின் சாரமாக மாறிவிடும்.
வன்முறை எண்ணம்கொண்ட ஒரு நபா என்னதான் அன்பைப்பற்றி பேசினாலும், அமைதியைப்பற்றி பேசினாலும், அதன் இறுதி வெளிப்பாடு விகாரமான, வேதனையான, வன்முறையாகத்தான் இருக்கும்.
ஆதிசைவம் தவிர மற்ற எல்லா வாழ்க்கைமுறைகளுமே, மற்ற எல்லா நெறிமுறைகளுமே வாழ்க்கையின் வேறு வேறு படி நிலையில் இருந்தவர்களால் உருவாக்கபட்டவையே.
சில பேர் ஆழமான வன்முறை உணர்வில் வீழ்ந்து கிடந்தவர்கள், சில பேர் கொடுக்கல், வாங்கல் எனும் பேரம் மனநிலையில் இருந்தவர்கள், சில பேர் பெயர் புகழ் என்பதையே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்தவர்கள். இவர்கள் யாருடைய வார்த்தைகளை நீங்கள் வாழ்ந்தாலும், உங்களுக்குள் இருக்கும் 'கடவுள் துகள்', கடவுள் நிலையை அடையுமா என்பதில் சந்தேகம் மட்டும் அல்ல, சாத்தியமே இல்லை என்பதுதான் சத்தியம்.
ஒவ்வொரு வாழ்க்கை/முறையுமே, அதை உருவாக்கியவரின் உணர்வு நிலையைச் சார்ந்துதான் உருவாக்கப்படுகிறது. ஒரு வாழ்க்கைமுறையை, ஒரு மதத்தை, ஒரு தத்துவத்தை உருவாக்கியவன் கொடுரமானவனாகவும், தாக்குவதும் போர்புரிவதுமே வாழ்க்கை என்பதுபோன்ற கருத்துக்களை உடையவனாகவும் இருந்தால், அவனைக் கடைபிடிக்கும் எல்லோருடைய கதியும் அதுவாகவே இருக்கும்.
ஒவ்வொருவருக்குள்ளும் கடவுள் துகளை கடவுளாய் மாற்றிடும் ஒரே வாழ்வியல் முறை ஆதிசைவம், எங்கு நீங்கள் இருக்கிறீர்களோ அங்கிருந்து துவங்கி, எங்கு நீங்கள் செல்ல வேண்டுமோ அங்கு வரை எல்லா உயிர்களுக்கும் வழிகாட்டும் ஒரே வாழ்வியல் முறை ஆதிசைவம்.
தமிழ் எனும் பெருமொழி புரிகின்ற உடலும் மனமும் கொண்டதனாலேயே நீங்கள் புண்ணியவான்கள்
எத்துணையோ நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான சம்பிரதாயங்களையம், வாழ்வியல் முறைகளையும், மதங்களையும், தத்துவக் கோட்பாடுகளையும், சித்தாந்தங்களையும், கம்யூனிசம், நாத்திகம் உட்பட எல்லாவிதமான கருத்துக்களையும் பல்வேறு கோணங்களிலும் ஆராய்ந்து, அறிந்து, படித்து, சிந்தித்து அவைகளின் உட்பொருளை உள்வாங்கி இருக்கின்ற தெளிவினாலும் தைரியத்தாலும் உங்களுக்குச் சொல்லுகின்றேன்...
ஆழ்ந்து கேளுங்கள் மக்களே, தமிழ் எனும் பெருமொழி புரிகின்ற உடலும் மனமும் கொண்டதனாலேயே நீங்கள் புண்ணியவான்கள். ஏனென்றால் அந்த ஒரு மொழியில்தான் ஆதிசைவத்தின் சத்தியங்கள் நேரடியாய்த் திறந்து வைக்கப்பட்டு இருக்கின்றன. மற்றவர்கள் எல்லோருமே அதன் மொழிபெயர்ப்பைத்தான் படித்தாக வேண்டும். நீங்கள் ஒருவர் மட்டுமே நேரடியாய்ப் படிக்கவும், அதன் துடிப்பை உங்கள் இதயத் துடிப்பாய் உணரவும், உங்களுக்குள் அதை உள்வாங்கவும், வாழவும், வாழ்வியல் அனுபவமாக மாற்றிக் கொள்ளவும், மிகப் பெரிய வாய்ப்பு உடையவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் மட்டும்தான் இந்த மிகப் பெரிய புண்ணியத்திற்கு ஆளானவர்களாக இருக்கிறீர்கள்.
தெரிந்து கொள்ளுங்கள், தமிழ் மொழி புரிகின்ற மனம் உங்களுக்கு இருந்திருக்குமானால், இருக்குமானால் முன்பு இருந்தோ அல்லது இப்போழுதேதான் இருக்குமானால் சைவத்தை இழக்காதீர்கள், சைவத்தை கண்டு கொள்ளுங்கள், கண்டு அறியுங்கள், வாழுங்கள், அது உங்களுடைய வாழ்வியல் நெறியாக மாறட்டும், உங்கள் வாழ்வியல் சத்தியமாக மாறட்டும்.
வேறு எந்தச் சித்தாந்ததிலும் இத்துணை தெளிவாக, கடைநிலை மனிதனுக்கும் கடைத்தேறும் வழியை, இடைச்செருகல் ஏதுமில்லாது, ஒரு இம்மி எடையும் சத்தியத்தில் குறையாது, எடையும் குறையாது மாத்திரையும் குறையாது, சத்தியத்தை சத்தியமாகவே சத்தியமாய் சதாசிவன் சொல்லி அருளிய வாழ்வியல் முறையான சைவம் பிடியுங்கள்.
வாழ்ந்திட வாழ வைக்கும் பெருவழியான சைவம் வாழுங்கள்.
2
ஆதிசைவத்தின் சரியை பாகத்தை ஆராய்வோம்.
சரியை: வாழ்க்கையை அனுசரிக்கும் முறை. வாழ்க்கையில் தினந்தோறும் கடைபிடிக்க வேண்டிய, அனுசரிக்க வேண்டிய விதிகள், எண்ண ஓட்டங்கள், சிந்தனை ஓட்டங்கள், வாழ்க்கைமுறையையே சரியை என்கிறோம்.
பல பேர் என்னிடம் கேட்கும் ஒரு விஷயம்: சுவாமிஜி, இறைவனை அடைவதற்கு ஏதாவது குறுக்கு வழியைக் கற்றுக் கொடுங்கள்!
ஒருமுறை, ஆனந்த யோகம் பயிற்சி வகுப்புக்கு வந்திருந்த மூன்று மாணவர்கள், அத்துறைக்கான பொறுப்பாளரிடம், ''ஸ்வாமியினுடைய சத்சங்கங்களைக் கேட்டு, மனம் என்றால் என்ன? அதை எப்படிக் கட்டுப்படுத்துவது ? ஜீவன் முக்தி எப்படி அடைவது என்ற கருத்துக்களை எல்லாம் கேட்டு மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்து, அதை வாழ வேண்டும் என்று நினைத்தோம். அது சார்ந்த பாடங்களை, அந்த நுட்பங்களை நாங்கள் இங்கு ஒரு படிப்புபோல், வகுப்பறைபோல் அமர்ந்து கற்றுக்கொள்ளத்தான் வந்தோம். ஆனால் இங்கே ஆடல், பாடல், பக்தி என்று பல்வேறு விஷயங்கள் நடக்கின்றன. எங்களுக்கு ஆடலை கற்றுக்கொள்ள விருப்பமில்லை, பாடலைக் கற்றுக்கொள்ள விருப்பமில்லை, பக்தியை, விக்ரஹ வழிபாட்டை கற்றுக்கொள்ள விருப்பமில்லை, இதெல்லாம் எங்களுக்கு வேண்டாம். தியான நுட்பங்கள் மட்டும் கற்றுக்கொடுப்பதுபோன்ற நிகழ்ச்சிகளை மட்டும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்,'' என்று சொன்னார்கள்.
இதை, பொறுப்பாளர் என்னிடத்தில் சொன்னபோது, முதல் வார்த்தை நான் சொன்னது, 'அவர்களைத் திருப்பி அனுப்புங்கள்' என்பதுதான்.