ஞானம்
ஞானம்
சதாசிவனோடு இரண்டறக்கலந்து, இருப்பின் இருப்பினால் இருப்பே இருப்பை உணர்ந்து, உள்ளதை உள்ளத்தில் உள்ளி, உள்ளுக்குள் இருந்து, உள்ளே உறைந்திருக்கும் சத்தியத்தை, சதாசிவத்தை, நித்தியத்துவமாய், நினைப்பும் மறப்பும் இலாத நெஞ்சினாய், 'நீர்த்தாரை' போன்று நித்தமும் சதாசிவத்தில் நிலைத்திருக்கும் நித்தியானந்த நிலையைத்தான் ஞானம் என்று சைவம் விளம்புகின்றது. தாமே சிவமாய், சிவோஹம் என்னும் ஜீவன் முக்த தன்மையில் நிலைத்து இருக்கும் நுட்பம் ஞானம். இதைத்தான் வித்யை என்கின்றோம்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், சைவத்தின் இந்த நான்கு முக்கியமான பாகங்கள், நான்கு படிகள் அல்ல, பாகங்கள். படிகள் என்பது வேறு, பாகங்கள் என்பது வேறு. படிகள் என்றால் ஒரு படியைக் கடந்து மறு படிக்குச் செல்ல வேண்டும், அந்த மறு படியைக் கடந்து மூன்றாம் படிக்குச் செல்ல வேண்டும். மூன்றாம் படி கடந்து நான்காம் படி செல்ல வேண்டும். இது அப்படி அல்ல.
ஒரு படியைக் கடந்து மறு படி செல்வது அல்ல, இவை நான்கும் ஒரே நேரத்தில் வாழ வேண்டியவை.
மனித இனம், கடந்த சில நூறாண்டுகளில் செய்த மிகப்பெரிய தவறு, சரியை, க்ரியை, போகம் மற்றும் ஞானம் - இந்த நான்கும் ஒன்றிற்கு, அடுத்து ஒன்று அடுத்து படி என்று புரிந்துகொண்டதுதான்.
அதனால்தான் கடந்த இரண்டு மூன்றாயிரம் ஆண்டுகளில், மூடத்தனங்களும் அறிவிலித்தனங்களும் கருத்துக்களாக, மதங்களாக உருவெடுத்தன. சைவம் தவிர வேறு சில மதங்கள் உருவெடுப்பதற்கான மிகப்பெரிய காரணம் மனிதன் செய்த இந்த மூடத்தனமே.
இந்த நான்கும் ஒன்றிற்கு அடுத்து ஒன்று நினைக்கும்பொழுதே, அகங்காரம் பிடித்த சில மனிதர்கள் நான்காவது படிதான் உயர்ந்தது என்று கற்பனை செய்துகொண்டு, அந்தக் கற்பனையினால் முதல் படிகளைக் கடைபிடிக்க வேண்டாம் என்கின்ற மூடத்தனத்தை உருவாக்கிக்கொண்டு, உருவ
வழிபாடே இல்லாத ஒரு மதத்தை உருவாக்க முடியும் என்கின்ற முடத்தனத்திற்கு, மூர்கத்தனத்திற்கு 'மதம்' என்கின்ற கருத்தையும் காட்டி, அதனால் ஏற்படும் மனம் குழம்பிய நிலையினால், உள்ளே இருக்கும் கோபத்தையும் கொந்தளிப்பையும் வெளிக்கொட்டும் நிலைக்கு 'அறப்போர்' என்றும், 'தெய்வப் போர்' என்றும் பெயரிட்டு, நிஜத்தில் இருந்து மிகவும் விலகி, மாயையில் சிக்கி, எல்லா மூட தன்மைகளையும் மாயைகளையுமே, அஞ்ஞான இருளையே மதமாகவும் காட்டுகின்ற மிகப்பெரும் கொடுமை மனித இனத்திற்கு நிகழ்ந்ததற்கான காரணம், முதல் காரணம் ... இந்த நான்கும் ஒன்றிற்கு, அடுத்து மற்றொன்று என்கின்ற தவறான புரிதலாகும்.
இவை நான்கும் அங்கங்கள், படிகள் அல்ல! ஞானியும், திருமேனி வழிபாடு செய்தே தீர வேண்டும். சரியை நிலையிலும் கிரியை நிலையிலும் சொல்லப்படும் திருமேனி தீண்டி வழிபடுவது ஞானநிலை அடைந்தவுடன் தானாய் விட்டுப்போகும் என்று கற்பனைகளையும் கனவுகளையும், ஒன்றைத்தாண்டி மற்றொன்று என்கின்ற மூடக் கருத்துக்களையும் சொல்லி, இல்லல் அளிக்கும் இல்லாத மதங்கள் எல்லாம் இவ்வுலகில் வந்திட, மூடர்களே முதற்காரணம் ஆனார்கள்.
சைவத்திலிருந்து விலகி, பரம்பொருள் சதாசிவன் உலகிற்கு அளித்த சத்தியமான வாழ்வியல் நெறியிலிருந்து விலகி, ஏற்பட்ட எல்லா மதங்களுக்கும், பணம் சார்ந்த வாழ்க்கை கோட்பாடுகளுக்கும் அடித்தளமே அஞ்ஞானமும் மாயையும்தான்.
ஒரு சின்ன கதை :
ஒரு ஊருக்கு, ஒரு பணக்கார முதலாளி தொழில் தொடங்குவதற்காக வந்தார். இவர் தொழில் தொடங்கப்போவதால் ஊரே வளமாகப் போகிறதென்று ஊரில் இருந்த மக்கள் எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள்! தான் பாம்புகள் சார்ந்த ஒரு வியாபாரம் செய்யப்போவதாகவும், ஒரு பாம்பைப் பிடித்து வந்துகொடுத்தால், ரூபாய் 1000 தரப்போவதாகவும் விளம்பரப்படுத்தி, ஊர் முழுக்க சுவரொட்டி ஒட்டினார்.
மக்கள், தங்கள் கண்ணில்பட்ட பாம்பைல்லாம் பிடித்துக்கொண்டுவந்து கொடுத்து, ரூபாய் 1000 பெற்றுச்சென்றார்கள்.
ஒரு வாரம் கழித்து, ஒரு பாம்புக்கு ரூபாய் 2000 தரப்போவதாக அறிவித்து, இரண்டாவது சுவரொட்டி ஒட்டினார். இப்போது மக்கள், கண்ணில் பட்டவை மாத்திரமல்லாது தேடிப்பிடித்துக் கொண்டுவந்து கொடுத்து பணம் பெற்றுச்சென்றார்கள்.
மூன்றாவது வாரம், ஒரு பாம்புக்கு ரூபாய் 5000 தரப்போவதாக அறிவிக்கப சுவரொட்டி ஒட்டினார். மக்கள், சுற்றியிருக்கும் வயல் காடெல்லாம் துழாவி, இருந்த பாம்பையெல்லாம் கொண்டு வந்தார்கள். இதற்குமேல் சுற்றுப்புறங்களில் பாம்பல்ல, பாம்பு முட்டை கூட இல்லை.
அடுத்த சுவரொட்டி அதிரடியாக வந்தது, ஒரு பாம்புக்கு ரூபாய் 10000 என்று! உடனே மக்கள் சுற்றி இருந்த காடு மேடெல்லாம் திரிந்து, வனம், காடு, ஆரண்யம் என எந்த இடத்திலும் ஒரு பாம்பையும் விட்டுவைக்காமல் கொண்டு வந்தார்கள்.
தமிழில் மட்டும்தான் காட்டுக்கு 3 வார்த்தைகள்.
மனிதனாலோ வேறு யாராலோ உருவாக்கப்படாமல் வனாந்தரமாக இருப்பது வனம்.
உருவாக்கினாலும் உருவாக்காவிட்டாலும் கட்டுப்படுத்த முடியாமல் அடர்ந்து கிடப்பது காடு.
ரம்யமாக இருப்பதற்காக மனிதன் உருவாக்கியது ஆரண்யம்.
அடுத்து வந்தது அதிரடி அறிவிப்பு, ஒரு பாம்புக்கு ரூபாய் 50000 என்று! சுவரொட்டி ஒட்டிவிட்டு, இரண்டு நாள் முக்கியமான வேலைக்காக வெளியூர் புறப்பட்டுச் சென்றார் முதலாளி. ஊர் மக்கள் எல்லாம், "பாம்பே இல்லையே, 50000 ரூபாய் என்று சொல்லியிருக்கிறார்களே!' என்று புலம்பினார்கள்.
அப்போது, பணக்கார முதலாளியிடம் வேலைபார்க்கும் ஒரு வேலைக்காரன் ஊர் மக்களில் சிலரை அழைத்து, ''கவலையேபடாதீர்கள், என் முதலாளி திரும்ப வருவதற்கு இரண்டு நாள் ஆகும். அவர் இதுவரை உங்களிடம் வாங்கிய பாம்புகளெல்லாம் என் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. ஒரு பாம்புக்கு 25000 ரூபாய் கொடுத்துவிட்டு, வேண்டுமென்பவர்களெல்லாம் எடுத்துச் செல்லுங்கள், நாளை காலை, அவற்றைக் கொடுத்துவிட்டு 50000 ரூபாய் வாங்கிக்கொள்ளுங்கள், அந்த 50000 ரூபாய் வாங்கின பிறகு, எனக்குரிய தர குக் கட்டணமாக 10000 ரூபாய் கொடுத்துவிடுங்கள் என்றதும், வீட்டில் இருந்த 5000 பாம்புகளும் ஒரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தன.
மறுநாள் காலை, பாம்பு வாங்கிப் போனவர்களெல்லாம் வந்தார்கள். ஆனால் வேலையாள்தான் அங்குக் காணோம்.
ஊர் மக்கள் சொந்த ஊர் பாம்பை ஆயிரத்திற்கும் இரண்டாயிரத்திற்கும் விற்று, 25000 ரூபாய்க்கு வாங்கியதுதான் மிச்சம், இதுதான் பணம். இதுதான் பங்குச் சந்தை.
பொருளுக்கு மதிப்புண்டு என்று சொல்பவனும், மதிப்பில்லை என்று சொல்பவனும் உறவாடும் களவாளிகள். அவர்கள் உறவாடும் களவாணிகள் என்று சந்தேகப்படாதவரை நாம் ஏமாற்றப்படுவோம்.
தன்னுடைய பங்களிப்பு எதுவுமே இல்லாமல், பங்குச்சந்தையை உருவாக்கி, எதையோ வாங்கியதுபோலவும், கொடுத்ததுபோலவும் மக்களிடம் கற்பனையை உருவாக்கி, அவர்கள் வாங்கியது, கொடுத்தது இரண்டிற்கும் கற்பனையான
மதிப்பையும் காட்டி, பிறகு கற்பனை மதிப்பிற்கு வரியும் கூட்டி, கடைசியில் விழித்துப்பார்க்கும்பொழுது, கற்பனை பூஜ்ஜியங்கள் கரைந்துபோயிருக்கும். அதற்கு நாம், நம்மையே குறை சொல்லிக்கொள்வோம். வேறு யார் மீதும் குற்றம் சொல்லக்கூட தெரியாத நிலையில் நாம் இருப்போம். இதற்குப் பெயர்தான் முதலாளித்துவ பங்குச்சந்தை.
இருபத்தைந்தாயிரம் கொடுத்து பாம்பு வாங்கியவர்களெல்லாம், திருடனுக்குத் தேள் கொட்டினா மாதிரி, அதைப்பற்றி மூச்சுக்கூட விடாமல், வெளியில் சொல்லாமல் இருந்தார்கள், ஏனென்றால், முதலாளிக்குத் தெரியாமல் அந்த மாதிரி வாங்கலாமா? தப்புத்தானே! தப்பு செய்ததனால்தான் உனக்கு இந்த மாதிரி நஷ்டமாயிற்று என்று மற்றவர்கள் ஏளனம் செய்வார்களே என்று நினைத்து, இப்படி ஏதாவது ஒரு காரணத்தை அவர்களே கற்பித்துக்கொண்டு கேள்வி கேட்காமல் இருக்கின்ற சூழலையும் உருவாக்குவதுதான் பங்குச்சந்தை வர்க்ககம்.