Chnidi NdachtiChapter 12 of 20
Chapter 12

இறைவனுக்கும் நிபந்தனை விதிக்கும் சங்கிலி நாச்சியார்

1 sections

இறைவனுக்கும் நிபந்தனை விதிக்கும் சங்கிலி நாச்சியார்

திருவெற்றியூர் வந்து தங்கியிருந்து, தினந்தோறும் பெருமானை தரிசித்து வரும் வேளையிலே, சங்கிலி நாச்சியாரைப் பார்க்கின்றார். இதில் பிரச்சினை என்னவென்றால் சங்கிலி நாச்சியார் சைவ வேளாளர் குலத்துப் பெண்மணி, சுந்தரமூர்த்திபெருமானோ ஆதிசைவ குலத்து உதித்தவர். குலம் சார்ந்த பிரச்சினை வேறு! சங்கிலி நாச்சியாரின் தகப்பனார், குலம் சார்ந்த ஒரு நபரைத் திருமணம் செய்துகொள்ள தயார்செய்தபொழுது, சங்கிலி நாச்சியார் இறைவனுக்கு அடிமை செய்யும் வன்-தொண்டருக்குத்தான் நான் என் வாழ்க்கையை முடிப்பேன் என்று உறுதியோடு திருமணத்தை மறுத்து, ஆலயத்திலேயே இருந்து பெருமானுக்கு சேவை செய்து கொண்டிருக்கின்றார்.

சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சங்கிலி நாச்சியாரைக் கண்டவுடன் காதல், இரண்டாவது காதல். திரும்பவும் சிறிதும் அச்சம், மடம், நாணம், வெட்கம் எதுவுமில்லாமல் நேராக பெருமானிடம் செல்கின்றார். இவர் ஒன்னும் அத்வைதி இல்லையே, இவர் சைவர்! நேராகப் பெருமானிடம் செல்கின்றார், "ஐயனே.. சங்கிலி நாச்சியாரைப் பார்த்தேன். நீங்கள்தான் இந்தத் திருமணத்தையும் நடத்தி வைக்க வேண்டும்." என்ன இனிமையான உறவுபாருங்கள், பக்தியின் சக்தி பாருங்கள். இதற்கு முதல் மனைவியான பரவை நாச்சியாரிடம் அனுமதியெல்லாம் வாங்கவில்லை.

திருவெற்றியூர் பெருமான், ''சரி, என்ன செய்வதென்று பார்க்கிறேன்,'' என்று சொல்கிறார். சொல்லிவிட்டு சுந்தரமூர்த்திபெருமான், தான் தங்கியிருக்கின்ற இடத்திற்கு சென்று விடுகின்றார்- நன்றாக இந்த இரவின் நிகழ்ச்சியைப் புரிந்துகொண்டீர்களென்றால், ஆழ்ந்துகேளுங்கள், இந்த இரவு என்ன நடந்ததோ அதைப் புரிந்துகொண்டால், உங்கள் வாழ்க்கை விடிந்தது! வேறு ஒன்றும் வேண்டாம்.

பிரபஞ்சத்தையே இயக்கும் பெருமான், முப்பத்துமுக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும், கின்னர, கிம்புருட, கந்தாவ, காந்தார, யக்ஷ, ராக்ஷ, தேவர், மானுடர் எல்லாம் நின்று துதிக்கும் திருக்கயிலாயத்து காமதேனு கற்பகவிருக்ஷத்தோடு கொலுவிருக்கும் பெருமான், எத்துணைகோடி சூழல்களைக் காத்து இரட்சித்து நடத்திக்கொண்டிருக்கும் பெருமான், இந்த சுந்தரர் விஷயத்திற்காக மட்டும், அன்று இரவு ஏறத்தாழ ஒரு 20 முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கிறது.

முதல் முடிவாக, அன்று இரவு சங்கிலி நாச்சியார் கனவிலே பெருமான் தோன்றுகின்றார், தோன்றி ''அம்மா! எனக்கே அடிமையான பக்தர்களில் ஒருவரைத்தான் மணம்புரிவேன் என்கின்ற எண்ணத்தோடு இருக்கிறாயே. வன்தொண்டன் தம்பிரான் தோழன், நல்ல சிவபக்தன் - எனது அடிமை, அவனைத் திருமணம் செய்துகொண்டு வாழ்!'' என்று சொல்ல, அவள் '' ஆகட்டும் அப்பனே அவ்வாறே செய்கின்றேன், ஆனால் என்னுடனேயே இங்கேயே வாழவேண்டும், என்னை விட்டுப்பிரியக்கூடாது என்று அவர் உறுதிமொழி கொடுத்தால், செய்து கொள்கிறேன்," என்று சொல்கிறார். ஏனென்றால் சங்கிலி நாச்சியாருக்குத் தெரியும், சுந்தரருக்கு ஏற்கெனவே ஒரு மனைவி இருக்கிறார் என்று !

''ஏற்கெனவே அவர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார் அதனால், இங்கேயே இருப்பதாக உறுதிமொழி பெற்றுத்தந்தால் செய்துகொள்கிறேன்," என்று சொல்கிறார். அந்தம்மாவினுடைய பக்தியைப் பாருங்கள், பெருமான் சொன்னாரே என்று நேரடியாக 'மாட்டேன்' என்று சொல்லவில்லை. நியந்தனை விதித்துக்கான், 'மாட்டேன்' என்று சொல்கிறார்கள்.