போர்வைக்குள் விடிந்த மகிழ்ச்சி
போர்வைக்குள் விடிந்த மகிழ்ச்சி
'போர்வைக்குள் புரண்டு புழுங்கிய நீண்ட இரவுகள் ...
இதயம் பிழிய வடிந்த இரத்தத்தில் ஈரமான இரவுகள்
மனதின் வெட்டிச் சத்தம் கேட்டு வெறித்துப் பார்த்தபோது வெளுத்திருந்தது வானம்- ஆனால்
இன்னும் விடியவேயில்லை வாழ்வு.
கவிதையாய்க் கேட்டவன் - மனதுக்கு உதையாய்ப் பதில் கிடைத்தது குருவிடமிருந்து ...
'எப்படி விடியும் ! ! ! எப்படி விடியுமென்று தேடாதவரை எப்போதும் விடியாது வாழ்வு.
அழகிய பூங்காவில் முட்களை மாத்திரம் தேடிப் பிடித்து அதிலேயே அழுந்தக் காலூன்றி நட! - என்று கட்டளையிடப்பட்ட கணினி மனிதன்போல், அழகிய வாழ்வில் வேதணைகளை மாத்திரமே தேடிப்பிடித்து அதிலேயே அமிழ்ந்து போவென்று சொல்லும் மன அமைப்பு மாறாத வரை மாற்றாத வரை விடிவில்லை. போய்வா!'
வேதனையில் ... மீண்டும் போர்வைக்குள் புரண்டான். இதயம் பிழிந்தான். விடிவு தேடி இரவு முழுவதும் !
விடிவு வடிவெடுத்தது ...
மன அமைப்பின் அமைப்புதான் மாந்தரை, மாளவும் ! மகிழவும் ! செய்யுமென்ற குட்டிச் சத்தம் கசிந்தது ... உள்ளிருந்து.
'மாற்றினாலென்ன மாளச் செய்யும் மன அமைப்பை ?' சிந்தனை உதிக்க ! உதிக்க ! மாற்றினான் மகிழ்ந்தான் வெளுத்த வானம் விடிந்தது !
இதயத்தில் ஈரக்காற்று வீச எவ்வளவு தூரம் நோக்கினும் வாழ்வில் மகிழ்ச்சியே கண்ணுக்குத் தெரிந்தது.
உங்கள் உருவத்தை நிர்ணயிப்பது உடலமைப்பு. உங்கள் குணத்தை நிர்ணயிப்பது மனஅமைப்பு. உங்களின் வாழ்வை நிர்ணயிப்பது உடலமைப்பல்ல மனஅமைப்பு!