Chapter 5

நீ மாளிகையில் மகிழ வேண்டியவன்

1 sections

நீ மாளிகையில் மகிழ வேண்டியவன்

வா! மனிதா வா! உன் வாழ்க்கை உன்னுடையதுதான் வா ! வாழ்ந்து பார். தட்டுத் தடுமாறித் திரட்டும் அனுபவங்களில் கட்டும் ஞான மாளிகையில் வாழ்ந்து பார் ... தேங்கிக் கிடக்கும் குட்டையல்ல நீ ஒரே மாதிரியான வாழ்வு வாழ் ! துள்ளியோடும் நதி நீர் நீ ! விதம் விதமாய் வாழ வேண்டும். வாழ்வை அனுபவிக்காது வீடில்லா அனாதையாய் திரியாதே! உள்ளுலகில். மாளிகையில் மகிழவேண்டியவன் நீ. நீதி நெறியில் வரையறை விதித்து – உன் வாழ்வை நெறித்து விடாதே. நீதி நெறிகள் இடத்துக்கு இடம் மனிதனுக்கு மனிதன் குலத்துக்குக் குலம் உருமாறி நிறம் மாறி நம்மை நெறிக்கும் பச்சோந்திகள் !

உனக்கும் மற்றவருக்கும் சந்தோஷமளிக்குமெல்லாமே – நீதி ! உனக்கும் மற்றவருக்கும் துக்கமளிக்குமெல்லாமே - அநீதி ! இவற்றை மீறிய நீதியில்லை. நீ கட்டுப்பாட்டுகளுக்குள் கட்டுப்பட்டு விடாதே ! கட்டுப்பட்டால் – வாழ்க்கை கடிக்க ஆரம்பித்து விடும். கவனமாக கவனித்து கட்டவிழ் ! கட்டுக்கடங்காத காளை கட்டுப்பட்டுக் கிடக்கிறது உன்னுள். வாழ்க்கையின் வர்ண ஜாலங்களுக்குள் குதி !

வித விதமான அனுபவங்கள் உன்னை வளர்க்கவே வசித்துக் கொண்டிருக்கிறது.

புதுப்புது அனுபவங்கள் புது மனிதனாகப் பொலிவுறச் செய்யும், புதிதாக உருவான அகமாளிகையில் உன்னை !